Tuesday, December 21, 2010

திருமந்திரம் என்னும் பெருமந்திரம்

சைவ சமயத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகிய திருமந்திரம் சாத்திரம், தோத்திரம் மற்றும் மந்திரம் என்னும் மூன்று நிலைகளிலும் சிந்திக்கத்தக்கதாகும். மந்திரம் என்று ஒரு நூலைக் குறிப்பிட்டோம் என்றால் அது திருமந்திரம் மட்டுமே. இந்நூலை இயற்றியவர் திருமூலர் என்பவர் ஆவார். இவர் பதினென்சித்தர்களுள் ஒருவர்.இவர் திருவாவடுதுறையை அடைந்து, ஈசனை வணங்கி மேற்குப்புறமாகச் சென்று படரரசின் கீழ் அமர்ந்து ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் ஆண்டுகள் தவமிருந்து மூவாயிரம் பாடல்கள் அருளினார். அவரது பாடல்களில் சிலவற்றை இங்கு நாம் சிந்திப்போம்.

1. ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
    நின்றனன் மூன்றினூள் நான்குசார்ந் தான் ஐந்து
    வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
    சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே.

     சிவன் ஒருவனே, சக்தியோடு இரண்டாய், படைத்தல், காத்தல், ஒடுக்குதல்(அழித்தல்) ஆகிய முத்தொழில் செய்து, நான்கு வேதங்களாய் விளங்கி, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து கண்மேந்திரியங்களை வென்று (அடக்கும் ஆற்றல் அளிப்பவன்), மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாதகம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களில் விரிந்து உடலில் கலந்து, ஏழாவதாகிய சகஸ்ராரம் என்னும் ஆதாரத்தில் (தலை உச்சியில்) பொருந்தி, 1.அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல். 2.மகிமா - மலையைப் போல் பெரிதாதல். 3 இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல். 4. கரிமா - மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல். 5. பிராத்தி - மனத்தினால் நினைத்தவை யாவும் தன் முன்னே அடைய, அவற்றைப் பெறுதல். 6 பிராகாமியம் - கூடு விட்டுக் கூடு பாய்தல். 7. ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல். 8. வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல். போன்ற எட்டு சக்திகளும் பெற்றுள்ளவர், அவற்றை நமக்கு அருள்பவர் சிவபெருமான் ஒருவரே.  

2. தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.

     சிவகுருநாதனைச் ஜோதிப்பிழம்பாய் சிரசின்மேல் காணுதல் தெளிவினைத் தரும். அக்குருநாதனாகிய சிவபெருமானின் திருநாமமாகிய அஞ்செழுத்தைச் செபித்தல் தெளிவினை நல்கும்.  அக்குருவின் உபதேச மொழியைக் கேட்பது தெளிவை உண்டாக்கும். அதுபோலவே சிவபெருமானின் ஒளிமயமான திருவுருவை இடைவிடாது சிந்தித்தல் (நினைத்து) மனம் ஒன்றுதல் மிக்க தெளிவைத் தரும்.

3. கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
    கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன் அன்று
    கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
    கல்லாத மூடர் கருத்தறி யாரே.

                  கல்லாத மூடர் (கல்வி கற்று சிவானுபவம் இல்லாத) மூடர்களைக் காணவும் கூடாது.  சிவத்தை உணராதவர்களைக் காணுதல் கூடாது.  அவர்கள் சொல்லும் சொற்கள் பயனற்றதாக இருக்கும் என்பதால் அவற்றை நாம் கேட்கவும் கூடாது. கற்றும் சிவனை உணராதவர்களைக் காட்டிலும்  கல்லாதார் (கல்வியறிவு இல்லாதவர்கள்) பிறரைத் தவறான வழிக்கு அழைத்துச் செல்லமாட்டார்கள் என்பதால் கல்லாதார் நல்லவரே. அவ்வாறு சிவத்தை அறியாத மூடர்கள் மெய்யான கருத்துக்கள் அறியார். 


Thursday, December 9, 2010

நமச்சிவாயத்தின் மகிமை

நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நா நவின் றேத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே.


ஞானம், கல்வி, நான் உணரும் இச்சை அனைத்தும் நமச்சிவாயமே.
அதனை எனது நாக்கால் நன்றாக உச்சரிப்பதன் மூலம்
அந்த நமச்சிவாயமே எனக்கு நன்நெறியைக் காட்டும்.

---அப்பா்.

Wednesday, May 19, 2010

உருத்திராட்சத்தின் மகிமை

உருத்திராட்சத்தின் மகிமை
தெய்வமணி என்னும் உருத்திராக்கம் – ருத்திராக்ஷம்
            சிவ சின்னங்களில் மிக முக்கியமானது உருத்திராக்கம். இது சிவலிங்கத்தின் வடிவம் ஆகும்.  உருத்திராட்சம் என்பது சிவபெருமானின் திருக்கண், சிவபெருமானின் மணி எனப் பொருள்.
              ருத்திராட்சத்தினை சிவமணி, மணி, கண்டி என்பா. மணி என்பது கடவுள் மணி. இதனையே கடவுள் கண்மணி என்பா. இதனை அடையாளமாலை என்றும் கூறுவா. சிவனுக்கிய சின்னமான திருநீறு, சிவமணி, ஐந்தெழுத்து (நமச்சிவாய) என்னும் மூன்றனுள் நடுவாக சிவமணி காணப்படும்.
              உருத்திராட்சம் காந்த சக்தியும், மின் சக்தியும் ஒருங்கே உடையது. இதை அணிபவர்களுக்கு இவ்வாற்றல் கிடைக்கப் பெறுவதால் உயிராற்றல் பெருகும்.  உடல் பொலிவு பெறும். வளம் பெருகும். நோய் அணுகாது. நல்லொழுக்கம் பெருகும். மேலும் குருதியை (இரத்தம்) தூய்மைப்படுத்தும்.
ருத்திராட்சம் தோன்றிய வரலாறு
            தாராகாஷன், கமராஷன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் சிவபெருமானின் அருள் வேண்டி கடும் தவம் புரிந்தனர்.  அவர்களது தவத்தைக் கண்டு மனம் இரங்கிய சிவபெருமான் அவர்களுக்கு தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆன மூன்று கோபுரங்களைக் கொடுத்தார்.  அதில் பறந்து செல்லும் சக்தியையும், அபூர்வமான ஆயுதங்களைப் பயன்படுத்தும் வல்லமையும் கொடுத்து அருளினார்.
              இதனால் ஆணவம் கொண்டு அனைத்து நாடுகள் மற்றும் மூவுலகையும் வெற்றி கொண்டார்கள். தேவர்கள் மிக வருந்தும்படி துன்பத்திற்கு ஆளாக்கினர். இவர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவபெருமானை அடைந்து தங்களைக் காக்கும்படி வேண்டினர்.
              சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டிய சிவபெருமான் அந்த மூன்று அசுரர்களையும் அழிக்க ஒப்புக் கொண்டார். தம் நெற்றிக் கண்ணால் அசுரர்களை அழித்தார்.
              எனினும், அவரது மனம் இளகி அவரது கண்ணில் இருந்து நீர் முத்து முத்தாக உதிர்ந்தது. அவ்விதம் உதிர்ந்த கண்ணீரே (ருத்திரன் – அட்சம்) ருத்திராட்சம் ஆனது. சத்தியத்தைக் காப்பதற்காகத் தோன்றியதால் இதற்கு உலகைக் காக்கும் சக்தியும் உண்டு என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
              உருத்திராட்சம் அணிவதால் சிவபெருமானின் திருவருளை நேரடியாகப் பெற்று வாழ்வில் உய்வடையலாம்.  அணியாமல் செய்யப்படும் தெய்வ பூஜைகள் எதுவாயினும் அது சிறப்பு பெறுவதில்லை.
ருத்திராட்சம் அணிய வேண்டிய காலம்
1.   தெய்வ பூஜைகள்
2.   ஈதல் (பிறருக்கு கொடுப்பது, பிறருக்கு கல்வி புகட்டுதல்)
3.   நீராடல் (குளிக்கும்போது)
4.   தானம் செய்தல்
5.   பிதுர் தர்ப்பணம் (இறந்த மூதாதையோருக்கு செய்யும் கடமை)
6.   திருமண நிகழ்ச்சி
7.   வீடு குடி புகுதல்
போன்ற அனைத்து நல்ல காரியங்களுக்கும் ருத்திராட்சம் அணிந்து செய்வது நல்ல பலன் தரும். இறைவனின் அருள் எளிதில் கிடைக்கும்.
 ருத்திராட்சம் அணிவதன் சிறப்பு
Ø  கங்கை, யமுனை, காவிரி, நர்மதை போன்ற புண்ணிய நதிகளில் நீராடிய சிறப்பைப் பெறுவர்.
Ø  ருத்திராட்சத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் வாசம் செய்கின்றனர்.
Ø  எல்லா தீய சக்திகளிலிருந்தும் காப்பாற்றும்.
Ø  மோட்சத்தை அளிக்கும்.
Ø  லட்சுமி கடாட்சம் உண்டாக்கும்.
Ø  புத்திரபாக்கியம் கிடைக்கும்
Ø  உலகைக் காக்கும் சக்தி கிடைக்கும்
Ø  ருத்திராட்ச மணியில் பட்டு வடியும் நீர் கங்கா தீர்த்தத்திற்குச் சமமாகும்
Ø  ருத்திராட்சத்தைப் பார்ப்பதால் மகா புண்ணியம்
Ø  தொடுவதால் கோடி மடங்கு புண்ணியம்
Ø  அணிந்து கொள்வதால் அதனினும் நூறு கோடி புண்ணியம் உண்டாகும்.
Ø  நோய் நீங்கி ஆரோக்கியமும், புண்ணியமும் கிட்டும்.
மருத்துவ குணம்
              உருத்திராட்சத்தின் மேல் முள் போல் படைக்கப்பட்டுள்ளது. நம் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
1.   மூளை
2.   மூச்சுப்பை (நுரையீரல்)
3.   இரத்தப்பை
4.   சிறுநீரகம்
5.   நரம்பு
6.   நாடி (சுவாசக் குழாய், இரத்தக் குழாய்)
7.   சர்க்கரை நோய்
8.   நெஞ்சு அழுத்தம்
9.   இரத்தக் கொதிப்பு
10.  மனம் ஆகியவை செம்மையாக வேலை செய்ய துணை புரிகிறது.
உருத்திராட்சத்தை முலைப்பாலில் உரைத்துக் குடிக்க
1.   ஜன்னி
2.   வலிப்பு
3.   மயக்கம்
4.   மூளைக் கொதிப்பு போன்ற நோய்கள் குணமாகும்.
ருத்திராட்சம் அணியும் இடங்கள் மற்றும் எண்ணிக்கை
1.   குடுமி, பூணூல்                      1 மணி
2.   தலை                                22 மணி
3.   காது                            1 (அ) 6 மணி    
4.   கழுத்து                              32 மணி
5.   புஜம் (ஒன்றுக்கு)                    16 மணி
6.   கை (ஒன்றுக்கு)                     12 மணி
7.   மார்பு                               108 மணி
8.   மணிக்கட்டு                         12 மணி
27 மணிகளைக் கொண்ட மாலை அணிவது சிறப்பாகும். 32 மணிகளைக் கொண்ட மாலையைக் கழுத்திலும், 108, 54, 27 மணிகளைக் கொண்ட மாலையைக் கழுத்திலும் அணிவர்.
பெண்களும் சிறு ருத்திராட்சத்தைப் பொன் கட்டி மார்பில் தாலியுடன் அணியலாம்.
அணியக் கூடாத காலம்
            காது, பூணூலில் உள்ள ருத்திராட்சம் எப்பொழுதும் இருக்கலாம். மற்ற நேரங்களில் அதாவது
1.   படுக்கும் போது
2.   மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும்போது
3.   உடல்நலக் குறைவால் படுக்கையில் இருக்கும் போது
4.   மதுபானம், மாமிசம் போன்ற உணவு சாப்பிடுபவர்கள்
அணியக் கூடாது.
உருத்திராட்சத்தின் முகங்களும் அவற்றின் பலன்களும்
முகம்
சொரூபம்
பலன்
1 முகம்
சிவ சொரூபம்
பிரம்மகத்தி தோஷம் நீங்கும்
2 முகம்
அர்த்தநாரி ஈஸ்வர சொரூபம்
பசுவைக் கொன்ற பாவம் மற்றும் பல பாவங்கள் நீங்கும்
3 முகம்
அக்கினி சொரூபம்
ஸ்திரி ஹத்தி தோஷம் நீங்கும்
4 முகம்
பிரம்ம சொரூபம்
நரஹத்தி தோஷம் நீங்கும்
5 முகம்
ருத்ர சொரூபம்
உணவினால் வரும் குற்றங்கள் நீங்கும். பொன்னைக் கவர்ந்த பாவம் நீங்கும்.
6 முகம்
சுப்பிரமணிய சொரூபம்
பிரம்மஹத்தி தோஷம் விலகும்.
7 முகம்
ஆதிசேஷன் சொரூபம்
பிரம்மஹத்தி தோஷம் விலகும்.நல்ல ஆரோக்கியம், பொன், பொருள் கிடைக்கும்.
8 முகம்
மஹா கணபதி சொரூபம்
அடுத்தவர் மணைவி, தீய பெண், அடுத்தவர் உணவு அபகரித்தல் போன்றவை நீங்கும்.
9 முகம்
பைரவர் சொரூபம்
கொலை பாவங்கள், பூத பிசாசுகள் தொல்லை போக்கி, சிவகுணத்தைத் தரும்.
10 முகம்
விஷ்ணு சொரூபம்
கிரக தோஷம், பேய், பூத, பிசாசு சர்ப விஷங்கள் விலகும்.
11 முகம்
ஏகாதச ருத்ர சொரூபம்
இடையூறுகள் விலகும். பலகோடி கோ தானம் செய்த பலன் உண்டாகும்.
12 முகம்
துவாதசாதித்தர் சொரூபம்
பல புண்ணிய நதியில் நீராடிய பலன் மற்றும் நோயால் வரும் துன்பங்கள் நீங்கும்.
13 முகம்
இந்திர, சதாசிவ சண்முக சொரூபம்
நினைத்த்து நினைத்தபடி நடக்கும் தன்மை உண்டு
14 முகம்
ருத்ரன், அனுமன் சொரூபம்
குலத்துக்கு பெருமை சேர்ப்பர். சிவனம், சக்தியும் சேர்ந்த வசிய சக்தியை அடைவர்.
கௌரி சங்கர் (2 ருத்திராட்சம் சேர்ந்த்து) சிவ பார்வதி சொரூபம்
கணவன், மனைவி ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டு ஒற்றுமையுடன் வாழ்வர்.குடும்பம் மேன்மை பெறும்.
கணேஷ் உருத்திராட்சம் (கொக்கி போன்ற அமைப்பு) (விநாயகர் முக அமைப்பு)
அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டும்.
       இவ்வளவு சிறப்பு வாய்ந்த உத்திராட்சத்தை நாம் அணிந்து மற்றவர்களையும் அணிய வைத்து எல்லோரையும் சிறப்புறச் செய்வோமாக.
திருச்சிற்றம்பலம்.
”இலங்குமாமணி உருத்திர ஆக்கம் ஒன்றணியில்
விலங்கெயிற்று வெம்பூதங்கள் முதலிய மேவா”

உருத்திராக்கம் அணிவதற்கு யாராவது வெட்கம் அடைந்தால் அவரைக் காண்பதற்கு இறைவனும் கூசுவார்.

”பூண்பதற்குக் கண்டியினை கூசியிடும் புல்லியரை
காண்பதற்குக் கூசும் அரன் கைத்து”

கோயில் குருக்கள், அர்ச்சகர்கள், அடியார்கள், துறவிகள் அவசியம் ருத்திராட்சம் அணிதல் வேண்டும்.
ஓம் நமச்சிவாய


Sunday, January 17, 2010

தேனினும் இனிய திருவாசகம்


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
--------
திருவாசகச் சிறப்புப் பாயிரம்
---------
(நேரிசை வெண்பா)


தொல்லை யிருப்பிறவிச் சூழுந் தளைநீக்கி
அல்லலறுத் தானந்த மாக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூ ரெங்கோன்
திருவா சகமென்னுந் தேன்.


(பதவுரை) எல்லை மருவா - முடிவு பெறாத நெறி அளிக்கும் - வீட்டின்ப நெறியைத் தருகின்ற எங்கோன் - திருவாதவூரின் கண்ணே பிறந்த எங்கள் தலைவனாகிய மாணிக்கவாச அடிகள் திருவாசகம் என்னுந் தேன் - பாடியருளிய திருவாசகம் என்று கூறப்பட்ட தேன்.